வாரணத்தேடல் – உபநயனக்காதை 1

எங்க வீட்டு விழாவை திட்டமிட்டு நடத்தினதுல ஏகப்பட்ட அனுபவங்கள். அதுல சுவாரசியமான ஒண்ணு இது. என் தங்கை திருமணம் ஸ்ரீரங்கத்துல நடந்தப்ப, அப்பா ஊர்வலத்துக்கு யானை வேணும்னு சொன்னாங்க. ஸ்ரீரங்கத்துல யானைகளுக்கு பஞ்சமில்ல. சில மணி நேரங்கள்ளயே ஒரு சிறுதொகைக்கு பேசி முடிவு பண்ணினோம்.

இப்ப அதே ஞாபகத்துல பையன் விழாவுக்கும் யானை கொண்டுவரலாம்னு சொல்லிட்டதால, கேட்டரர்கிட்டதான் முதல்ல பேசினேன். அவர் அதுக்கு முன்னாடி ஒரே ஒரு விழாவுக்கு கோவிடுக்கு முன்ன கொண்டு வந்ததாவும், 65000 ஆச்சுன்னும் , இப்ப அதுக்கு மேலயே ஆகும்னு சொன்னார். சற்றே கெதக்குன்னு இருந்தாலும், அப்பா கேட்டாங்க அதை ஏன் நிராசையாக்கணும்னு , ஓகே சொல்லிட்டோம். ஆனா கேட்டரர் பெரிய செய்தி ஒண்ணோட வந்தாரு. தமிழ் நாடு அரசோட உயிர்வதை தடைச்சட்டத்தின் அடிப்படைல யானைகளை இது மாதிரி கண்காட்சிக்கு அழைத்து வர்றது தடை செய்யப்பட்டுட்டதா.

ஆனா கோவை, ஸ்ரீரங்கம் இந்த ரெண்டு ஊர்ல மட்டும் இதுக்கு கொஞ்சம் கொல்லைப்பக்கமான வழி இருக்கறதாவும் சொன்னாரு. யானைக்காக விழாவையா மாத்தமுடியும்னு, சரி விடுங்கன்னு அடுத்தடுத்த வேலைகளைப்பார்க்க ஆரம்பிச்சுட்டோம். மற்ற விஷயங்கள்ள கவனம் செலுத்த ஆரம்பிச்சு இதை ஆல்மோஸ்ட் மறந்துட்ட வேளைல ஒரு நாளைக்கு என்னோட கல்லூரி நண்பரோட இல்ல விழா ஒண்ணுல யானை ஒண்ணு ஜம்முன்னு நின்னுட்டு இருந்தது. ஆஹா, இவனுக்கு மட்டும் எப்படி உயிர்வதை தடைச்சட்டம் இல்லாமப்போச்சுதுன்னு பதறிப்போய் ஃபோனைப்போட்டேன்.

அந்த விழாவிலேயேதான் இருந்தான். உள்ளிக்கோட்டை கிராமத்துல. எங்கேருந்துடா யானையைப்புடிச்சேன்னதுக்கு, மெட்ராஸ்லேர்ந்துதான்றான். எப்பட்றா? இங்கதான் பெர்மிஷன் இல்லேன்றானுவளேன்னா, சிரிக்கிறான். விஷயம் என்னன்னா இந்த உயிர்வதை தடைச்சட்டத்தால யானை கிடைக்காத threat ஐ, ஒரு ஆளு ஆப்பர்சுனிடியாக்கி ஒரு செயற்கை யானையை வச்சு வியாபாரம் செஞ்சுட்டு இருக்காரு.

அச்சு அசல் ஒரிஜினல் யானை போலவே ஒரு பொம்மை, அங்கங்க மோட்டார் வச்சு, துதிக்கை அசைக்கும், காதை ஆட்டும், பின்னால் அவங்களே வாய்ஸ் ஓவர்லாம் வச்சு பிளிறல் சத்தம் போடறாங்க. ஊர்வலம் வேணும்னா (of course with extra money) கொஞ்ச தூரத்துக்கு பொம்மை மேலயே உக்கார வச்சு நவத்தி விடுறாங்க. சற்று தொலைவிலேர்ந்து பாத்தா அதை பொம்மை யானைன்னே சொல்ல முடியாத அளவுக்கு பெர்ஃபெக்‌ஷன்.

4 மணி நேரத்துக்கு 10000 ரூபாய். அப்புறம் என்ன, யானை இல்லாததுக்கு அங்குசமாவது கிடைச்சுதேன்னு ஒரு அந்த பொம்மையைக்கொண்டு வந்து நிப்பாட்டிட்டோம் 🙂