உங்களைப்பொறுத்த வரையில் ’அட இன்னொரு தடவை பார்க்கலாம் போலருக்கே’ என்று சமீபத்தில் எண்ண வைத்த திரைப்படம் எப்போது வந்தது என நினைவுபடுத்திப்பாருங்கள். எனக்கு ஒரு இரண்டு வருடம் இருக்கலாம். ‘கமீனே’ உங்களை மறுபடியும் அப்படி எண்ண வைக்கும் சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. விமர்சனங்களை விட்டுவிடுங்கள். உங்கள் மனதுக்கியைந்த முற்றிலும் இந்தியத்தனமான சற்றே பிளாக் காமெடி தோய்த்த ஒரு ஆக்ஷன் திரில்லர் பார்க்க ஆசைப்பட்டீர்களாயின் கண்டிப்பாக கமீனே உங்களுக்கான திரைப்படம்தான்.

கமீனே என்ற சொல்லை rascals / scoundrels என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். குட்டு(guddu), சார்லி என்ற இரட்டையர்கள்தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகர்கள். குட்டுவுக்கு பேசும்போது வாய் திக்கும். சார்லிக்கு பேச்சு நன்றாக வரும் என்றாலும் s என்ற உச்சரிக்கும் இடத்திலிலெல்லாம் f என்று உச்சரிப்பான்.(கேஸே என்பதற்கு ஃபேஸே, சலே என்பதற்கு ஃபலே). சார்லி குதிரை சூதாட்டங்கள் நடத்தும் ஒரு சிறு மாஃபியா குழுவில் ஆக்டிவ் உறுப்பினன். குட்டு ஒரு NGO நிறுவனத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரகன். ஆயினும் இருவரும் பல வருடங்களாய் பேச்சு வார்த்தையின்றி, மூன்று வருடங்களாய் சந்தித்தேயிராமல் வாழ்ந்து வருபவர்கள். ஒரு மழைநாள் இரவில் அவர்கள் வாழ்வில் நடைபெறும் தனித்தனி சம்பவங்கள் அவர்களை சந்திக்கவைக்கின்றன. அந்த முழுநாளில் என்ன நிகழ்ந்த்து என்பதுதான் முழுத்திரைக்கதையுமே.
இந்த நான் – லீனியர் திரைக்கதைதான் திரைப்பட்த்தின் முழுபலமும். முதல் 15 நிமிடங்களுக்கு என்ன நிகழ்கிறது என்று தெரியாமலேயே பாதி இருட்டும் பாதி கேமரா ஆட்டமுமாய் ஒவ்வொரு கதாபாத்திரமும் வந்துபோகின்றன. ஆனால் முன்னேயும் பின்னேயுமாய் நகரும் காட்சிகளைப்புரிந்து கொண்டபின் சுவாரசியம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
’ஜப்வீமெட்’ திரைப்படத்தில் ஆபிசர் தோற்றத்தில் வந்த அதே ஷாகித் kaதான் இந்த இரட்டையர்கள் வேடத்திலும் நடித்திருக்கிறார். இந்தப்பையனுக்கு இவ்வளவு நடிக்க வருமா என அசரடித்திருக்கிறார். மராத்தியப்பெண்ணாக வரும் ப்ரியங்காசோப்ராவும் ஷாஹித்,பிரியங்கா இடையே கிளர்ந்தோடும் அன்னியோன்னியமான காட்சிகள் அடுத்த ஆச்சர்யம்.
மஹாராஷ்டிரா மராத்தியர்களுக்கே என முழங்கும் ஒரு அரசியல்கட்சியின் தலைவன் (அமோல் குப்தே அசரடிக்கும் ஒரு நடிகர்). ஒரு கோகெயின் கும்பலுக்கு துணைபோகும் போலீஸ் அதிகாரி, குதிரை பேரங்களை நிர்ணயிக்கும் மூன்று பெங்காலி சகோதரர்கள், மழைக்கால மும்பையின் ராத்திரி நேரங்கள், அதிரவைக்கும் பின்னணி இசை, சோர்வடையச்செய்யாத திரைக்கதை, சிலீரென தென்றலாகவும் பளீரேன மின்னலாகவும் பலே வசனங்கள என எல்லா ஏரியாக்களிலும் விஷால் பரத்வாஜ் பின்னியிருக்கிறார்.
கட்டாயம் திரையரங்குகளில் சென்று பாருங்கள்.