நம்பிக்கை துரோகம் என்ற வார்த்தைகள் நம்மில் பலருக்கு மூன்றாம்பக்க செய்தியாக பத்திரிக்கைகளில் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருப்போம். ஒருவனது வாழ்க்கையினையே புரட்டிப்போடவல்ல துரோகம் பற்றிய திரைப்படங்களை –அது tragic plot என்பதால் – பெரும்பாலான கதாசிரியர்கள் அல்லது இயக்குனர்கள் எடுக்க விரும்புவதில்லை அல்லது அப்படி ஒரு சம்பவம் அவர்கள் கதையில் நிகழுமென்றாலும் அதனை பற்றிய டீடெய்ல்ஸ் பற்றி பேசாது முடிவுகளை மட்டும் சொல்லிக்கொண்டு போய்விடுவார்கள்.
ஆனால் “உதயனானு தாரம்” இதே tragic plot ஐ சிறுகச் சிறுக நகைச்சுவை பூச்சு போட்டு மெருகேற்றி மிகவும் தரமான படைப்பாக நம்மிடையே உலவவிட்டிருக்கிறது. இரண்டாவதாக சமகால திரைப்ப்டங்களைப்பற்றியும், திரை கதாநாயகர்களைப்பற்றியும் மிகவும் துணிச்சலான கருத்துக்களை சொல்லும் satire சினிமாக்களின் வரிசையில் உதயானனு தாரம் நிச்சயம் முக்கிய இடம் பெறுகிறது. எப்படி கதை, இயக்கம், ஒளிப்பதிவு, நடனம், இசை என்று பார்த்து பார்த்து செதுக்கிய மலையாள சினிமா இன்று வெறும் வண்ண வண்ண உடைகளுக்கும், cooling glass culture க்கும் அடிமையாகிப்போய் இருக்கின்றது என்பதையும் அடிநாதமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கிறது இதன் திரைக்கதை. சீனிவாசனின் மிகச்சிறந்த திரைக்கதையும், மோகன்லாலில் மிகப்பிரமாதமான நடிப்பும் இந்த திரைப்படத்தினை மிகவும் சிறந்ததாக நிலைநிறுத்தி விடுகின்றது.
உதயன் என்று அறியப்படுகிற உதயபானு (மோகன்லால்). கோடம்பாக்கத்தில் வசிக்கும் ஒரு திரைப்பட உதவி இயக்குனர். மிகவும் சிறந்த படைப்பாளியாக அறியப்படுவன். தினமும் சத்யஜித்ரே முதலான மூத்த திரைப்பட இயக்குனர்களின் திரைப்படங்களுக்கு பூஜை செய்யும் அளவிற்கு சினிமா பக்தன். எல்லா சினிமா சார்ந்த இணை இயக்குனர்கள் போலவே தனது முதல் படத்திற்கான கதையை மிகுந்த கனவுகளுடனும், அழியாத கதாமாந்தர்களுடனும், சிறந்த கதைகளத்தினூடேயும் உருவாக்கி தனக்கு ஏற்ற producer க்காக காத்திருப்பவன்.
மலையாள சினிமாவில் ஒரு icon ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவன். (மதுமிதா [மீனா] என்கிற வளர்ந்து வரும் நடிகையை திரைத்துறையில் அறிமுகப்படுத்துவதற்கு recommend செய்தவன் என்பதால் அவர்கள் இருவருக்கும் காதல் என்று உலா வரும் வதந்திகளும் உண்டு.)
ராஜப்பா என்கிற எந்த திறமையும் இல்லாத, கதை நாயகனுக்கு உண்டான அழகோ, உடற்கட்டோ சிறிதும் இல்லாத ஆனால் எப்படியேனும் திரைப்படங்களில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துவிடும் என்று அதே கோடம்பாக்கத்தில் உலா வரும் பிறவி. தான் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்காத காரணத்தினால் துரத்தியடிக்கப்பட்டு உதயனின் கருணையால் அவனின் அறையை சிறிது நாட்கள் பகிர்ந்து கொள்கிறான். மதுமிதாவின் சொந்தங்கள் பணத்திற்காய் அவளை துரத்த விரக்தியில் அவள் உதயனை சரணடைகின்றாள்.
சாதாரண உரையாடல் ஒன்றின்போது உதயம் தனது கனவு திரைப்படத்தைப்பற்றி பேசும்போது ராஜப்பா தன்னை திரைப்படத்தின் நாயகனாக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவிக்கிறான். திரைப்ப்ட நாயகன் என்பவனுக்குறிய உடல் மொழிகளையும், பாவங்களையும் எப்படி சிறப்புற கையாள வேண்டுமென்றும் உன்னிடம் அது ஒன்றும் இல்லையென்றும் கூறிவிடுகிறான் உதயன். இதனால் சோர்வுறும் ராஜப்பா தனது crooked mind ன் காரணமாக உதயனின் கதையினை திருடி ஒரு தயாரிப்பாளரிடம் கொடுத்து இந்த கதையினை எடுக்க வேண்டுமென்றால் தன்னை கதாநாயகனாகப் போட வேண்டும் என்று வற்புறுத்துகிறான். கதையின் பலத்தினை மனதில்கொண்டு தயாரிப்பாளரும் சம்மதிக்கு உதயனின் கதை ராஜப்பா பெயரில் அவனே கதாநாயகனாக நடிக்க மிகப்பெரிய வெற்றி பெருகிறது. தனது பெயரை சரோஜ்குமார் என்று மாற்றி வைத்துக்கொண்டு வலம் வருகிறான்.
தனது சொந்த வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் மிகவும் சிரமத்திலிருக்கும் உதயன் இந்த செய்கையினால் நிலைகுலைந்து விடுகின்றான். . தொடர்ந்து வாழ்க்கை நடத்த பொருள்வேண்டி கேட்டரிங் சர்வீஸில் இணைகிறான். தனக்காக உதயன் படும் சிரமங்களை பொறுக்காது மதுமிதா அவனைப்பிரிந்து மீண்டும் திரைத்துறையில் நடிக்க இணைகிறாள். ஒடிந்துபோகும் உதயன் மிகுந்த மன உளைச்சலில் மது அருந்தத்துவங்குகிறான்.
உதயனின் நண்பனும் பிரபல தயாரிப்பாளனாக இருக்கும் பேபிகுட்டன் (முகேஷ்) அவனுடைய நிலையை கருத்தில் கொண்டு தானே அவனது புதிய கதையை தயாரிக்க முன்வருகிறார். ஆனால் வியாபார காரணங்களுக்காக ராஜப்பா என்கிற சரோஜ்குமாரையே கதாநாயகனாக போடவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். சில ஆரம்ப எதிர்ப்புகளுக்கு பிறகு உதயன் அதற்கும் சம்மதிக்கிறான். ஆனால் அங்கும் தொடர்ந்து படப்பிடிப்புக்கும், உதயனின் இயக்கத்திற்கும் தொல்லைகள் கொடுத்தவண்ணமே இருக்கிறான் ராஜப்பா.
பிறகு எவ்விதம் உதயன் இந்த தடைகளைக்கடந்து தனது இயக்குனர் கனவை நனவாக்குகிறான் என்பதனை மிக அழகாக டைரக்ட் செய்திருக்கிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
ஒரு சினிமா satire திரைப்படத்தில் சமகால சினிமாவை விமர்சிக்கும் வசனங்கள் கண்டிப்பாய் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது ஆகிவிடும். இந்த திரைப்படத்திலும் அது போன்றே எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சாட்டையடியாய் திரைப்படங்களையும், ஹீரோயிசத்தினையும் விமர்சிக்கிறது. இந்த திரைப்ப்டத்தின் கதாநாயகனாகிய மோகன்லாலைக் கூட சந்தடி சாக்கில் விமர்சிக்கும் அளவிற்கு சீனிவாசனின் பேனா மிகுந்த கூர்மையாயிருக்கிறது.
இது மோகன்லால் படம் என்று கூறுவதைவிட சீனிவாசனின் படம் என்பதுதான் மிகப்பொருத்தமாக இருக்கும். நவீன சூப்பர்ஸ்டார்களை பின்னிப்பெடலெடுக்க வைக்கிறது அவரது வசனங்களும், செய்கைகளும். மம்முட்டி, மோகன்லால், திலீப், சுரேஷ்கோபி என யாரையும் விட்டு வைக்கவில்லை. அவரவர்களுக்கு சொல்ல வேண்டியதை படம் நெடுக சொல்லிக்கொண்டேயிருக்கிறார். நிச்சயம் தவறாமல் பார்க்கவேண்டிய திரைப்படம். பாருங்கள்.
உதயனானு தாரம் (“உதயன்தான் நட்சத்திரம் “- Udhayan is the star)
நடிகர்கள் : மோகன்லால், சீனிவாசன், மீனா, ஜெகதி,முகேஷ் மற்றும் பலர்
கதை,இயக்கம் : ரோஷன் ஆண்ட்ரூஸ்
திரைக்கதை வசனம் : சீனிவாசன்
இசை : தீபக் தேவ்
பின்குறிப்புகள் 1. ரோஷன் ஆண்ட்ரூஸ் இதனை ஹிந்தியிலும் இயக்குறார் – Shortcut – the con is on என்ற பெயரில்..
2. தமிழில் வெள்ளித்திரை என்ற பெயரில் விஜி டூயட்மூவீஸ் க்காக இதே திரைப்ப்டத்தினை இயக்குகிறார்.
அறிமுகத்திற்கு நன்றி! ரொம்ப சுவையாக இருக்கும் போல… தமிழில் பார்க்கும் ஆவல் அதிகரிக்கிறது.
வருகைக்கு நன்றி பாலா சார். ரொம்ப நல்லா இருக்குன்னாலும், தமிழ்ல வரப்போற output பத்தி
கவலையாதான் இருக்கு. பார்ப்போம்.
சீனு & பரதம் பார்த்தால், பயம் வரத்தான் செய்யும் 😛
மலையாளத்தில் மோகன்லால் மம்மூட்டிய கிண்டலடிக்கிற மாதிரி டயலாக்கெல்லாம் தமிழ்ல வைக்கமுடியுமா? பாவம் ப்ரகாஷ்ராஜ்’ன்னு தான் தோணுது.
ஆமாம் சார். பெரிய controvarsy ஆகிடும் இங்க. அந்த படத்துல போற போக்கிட சீனிவாசன் மோகன்லால் GULF ல ஹோட்டல் பிஸினஸ் பண்றதை எல்லாம் சொல்லுவார். தமிழ்ல அப்படி எல்லாம் ஒபன் ஸ்டேட்மென்ட் விட்டா ஆட்டோல்ல வரும் !
Pingback: திருஷ்டிப்பொட்டுகள் « Siva’s Chronicle